கடந்த அக்டோபர் 26, 27 தேதிகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான 2+2 அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் இறுதியில் அக்டோபர் 27 அன்று இருநாடுகளும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA -Basic Exchange and Cooperation Agreement)- செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் இந்திய ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்து செய்திகளை வெளியிட்டன. “இந்தியா, அமெரிக்காவின் நம்பிக்கைக்குகந்த நண்பன் என்கிற அந்தஸ்தை அடைந்துவிட்டது! ஆகையால்தான் தேர்தல் நேரத்தில்கூட அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா வந்துஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளார். இந்தியா இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், அமெரிக்காவிடமிருந்து ராணுவ ரீதியிலான பூகோள தகவல்களை பெறமுடியும். அதில் பூகோள அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு தேவையான பருவநிலை குறித்த தகவல்கள், சாட்டிலைட் படங்கள், அமெரிக்காவின் வான்வெளி அமைப்புகளிலிருந்து தகவல்கள் - இப்படி நிறைய தகவல்கள் கிடைக்கும். இந்திய ராணுவத்தின் மூன்று அமைப்புகளுக்கும் இது உதவும்” என ஊடகங்களில் குரல்கள் ஒலித்தன.
இந்த சந்திப்பில் இருநாடுகளின் ஒத்துழைப்பினை மேலும் முன்னெடுத்துச் செல்வது, இரு நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம், ஆயுத வியாபாரம் போன்றவற்றை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்வது குறித்துவிவாதிக்கப்படுகிறது. பெகா (BECA) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதன் விளைவாக இந்தியா அமெரிக்காவுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவது என்கிற நிகழ்ச்சிநிரல் நிறைவு பெற்றுள்ளது. 2016-ல் லெமோவா - (Logistics Exchange Memorandum of Agreement - LEMOA) வில் இந்தியா கையெழுத்திட்டது. Communications, Compatability and Security Agreement (COMCASA) வில் 2018ல் கையெழுத்திட்டது. இவை அனைத்துமே 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்தபின்பு நடைபெற்றுள்ளது என்பது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்த ஒப்பந்தம் என்பது பொதுவாக பேசப்படுவதை போல அமெரிக்காவிடமிருந்து இந்தியா, ராணுவ ரீதியிலான தகவல்களை பெறுவது என்பது மட்டுமல்ல. இந்தியாவும் தன்னுடைய ராணுவம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். “இதனால், இந்தியாவுக்கு இனிமேல் போர் திறனில் சுயாட்சி(Strategic Autonomy) என்பது இருக்க முடியாது” என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மேலோட்டமாகப் பார்க்கையில் இவையெல்லாம் மிகஅசாதாரணமான விஷயங்களாகத் தோன்றும். ஆனால்உற்று நோக்கினால், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதன் மூலமாக, இந்தியாவின் சைபர் தளத்தில் அமெரிக்கா தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் கொடுத்துள்ளது. தவறான சைபர் நடவடிக்கைகள், சைபர் தளத்தில் மட்டுமே நடப்பதில்லை. சிஸ்டம் (System) மூலமாகவும் இவை நடக்கின்றன. உதாரணமாக கம்ப்யூட்டர் மென்பொருள் புரோசெசர், ரூட்டர் இவற்றின் மூலமாகவெல்லாம் நடைபெற வாய்ப்புள்ளது. காம்கசா COMCASA - Communication, Compatability and Security Agreement) வில், அமெரிக்க நிபுணர்கள் மட்டுமே System உபயோகப்படுத்த அதிகாரம் உள்ளவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் அதிலுள்ள Dataவை அவர்கள் நினைக்கின்ற காலம் வரை செயலற்ற
வையாக ஆக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியாக உள்ள ஆபத்துகளை சொல்கிறது.
“மைக் பாம்பியோ இந்தியா வருவதற்கு முன்பே அமெரிக்கா எழுப்பிய விஷயங்களெல்லாம், இந்த வருகை என்பது சீனாவை அதட்டுவதற்கான, மிரட்டுவதற்கான நடவடிக்கைதான் என்பதனை உணர்த்தின. ஒவ்வொரு முறையும் மைக் பாம்பியோ அவர்கள் சீனாவிடமிருந்து வரும்சவால்கள் குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகஒரு அணியை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அந்த நோக்கத்தில் இந்திய பசிபிக் கொள்கைகளை வகுப்பது குறித்தும் பேசியது நாம் கவனிக்கவேண்டிய ஒன்று” என்கிறது தி ஹிந்து ஆங்கில நாளிதழின் தலையங்கம் (29.10.2020).
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பானை உள்ளடக்கிய குவாட் (QUAD) கூட்டம் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நேரத்திலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், குவாட் (QUAD) அமைப்பு ஒரு ராணுவ கூட்டணியாக அமைய வேண்டும் என பாம்பியோ கூக்குரலிட்டுள்ளார். அத்தோடு அவர் நிற்கவில்லை. “சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து குவாட் நாடுகளை பாதுகாப்பது மிக முக்கியமானது” என கொக்கரித்துள்ளார்.
சென்ற ஜூன் மாதம் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தான் காரணம் எனக் கூறியுள்ளது.ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவின் நீண்டநாள் ராணுவக் கூட்டாளிகளாக உள்ளபோதிலும், ஒருகட்டத்திற்கு மேல் சீனாவின் கோபத்திற்கு இலக்காக விரும்பவில்லை. “இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்ஆகிய மூன்று நாடுகளிலும் வலதுசாரி அரசுகள் உள்ளபோதிலும், எந்த அரசுமே நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள நாடுகளைப் போன்று அமெரிக்காவோடு ஒரு ராணுவக் கூட்டில் போய் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை” என்கிறார்சர்வதேச அரசியல் நோக்கர்களில் ஒருவரான ஜான் செரியன் (பிரண்ட்லைன், நவம்பர் 6, 2020).
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் கடும் எச்சரிக்கைக்கு பின்பு குவாட் (QUAD) அமைப்பிலிருந்து ஆஸ்திரேலியா விலகிக்கொண்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது ஆட்சியில் உள்ள வலதுசாரி அரசு அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணிந்துள்ளது. அதுமட்டுமல்ல. பூகோளப் பரப்பில், அது அமைந்துள்ள பகுதியில், அமெரிக்காவை உற்சாகப்படுத்தும் நாடாகவும் (Cheer Leader)உள்ளது. இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள சீனா,ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பால் பொருட்கள் ஒயின், தாதுக்கள் போன்ற பொருட்களின் அளவை மிகவும் குறைத்துவிட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகும் மாட்டிறைச்சி, பார்லி போன்றவற்றை தடை செய்துள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், டிரம்ப் அரசின் கட்டளைகளை கண்மூடித்தனமாக ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்றி வருவது பற்றி எச்சரிக்கை செய்துள்ளனர். டிரம்ப் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவதன் பொருளாதார விளைவுகளை ஆஸ்திரேலியா ஏற்கனவே உணர ஆரம்பித்துள்ளது. ஜப்பானின் புதிய பிரதமர் யோஷிஹைட் சுகாவும் சீனாவுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். பதவியேற்ற உடனேயே அவர் “சீன ஜனாதிபதியுடன் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். சீனாவுடனான வழக்கமான சந்திப்புக்களை நடத்துவோம். உச்சிமாநாடுகளை நடத்துவோம்”எனக் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் சீன ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின்போது “இருநாடுகளுக்கும் இடையிலான ராஜிய உறவுகள், ஜப்பானுக்கு மட்டும் முக்கியமானவை அல்ல. இந்த மொத்த நிலப்பரப்பிற்கும், சர்வதேச நிலைமைக்கும் மிகவும் முக்கியமானவை” எனக் கூறியுள்ளார்.குவாட் அமைப்பிலுள்ள நாடுகள் சீனாவோடு கொண்டுள்ள வர்த்தகம்.
2018-19 (அமெரிக்க டாலர்களில்)
1.அமெரிக்கா 737.1 பில்லியன் டாலர்
2.ஆஸ்திரேலியா 252 பில்லியன் டாலர்
3.ஜப்பான் 353.7 பில்லியன் டாலர்
மோடி அரசின் தத்துவார்த்த முன்னுரிமை (Ideological Predilections) காரணமாகவே இந்தியா, அமெரிக்காவுடன் மிகவும் நெருங்கி உள்ளதாக ஜான் செரியன் கூறுகிறார்.பல வருடங்களாக குவாட் அமைப்பிடம் இருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும் கூட(அதனுடைய பாதுகாப்பு குறித்த கருத்துக்களுக்காகவும், சீனாவிற்கு எதிரான அணுகுமுறை காரணமாகவும்) தற்போது அதனோடு மிகவும் நெருங்கி உள்ளது. மலபார் பகுதியில் ராணுவ கப்பற்படை பயிற்சிகளுக்கு ஆஸ்திரேலியாவை இவ்வரு
டம் அழைத்திருப்பது அதனை உறுதி செய்கின்றது.இன்றைக்கு உள்ள சூழலில் அமெரிக்காவோடு இந்தியா நெருங்குவது என்பது இந்தியாவிற்கு உகந்தது அல்ல என்கிறார் முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் (தி இந்து, 2.11.2020). 1988ற்குப் பின்பே, சீனாவுடன் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் பார்த்து வந்துள்ளது இந்தியா. 2017 தோக்லாம் சம்பவத்திற்கு பின்பு கூட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேவூஹானில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பின்னர் மகாபலிபுரத்தில் நடந்துள்ளது. ஆனால் இன்று இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு இந்திய - சீன உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குவாட் அமைப்பை தீவிரமாக ஆதரிப்பவராகவும், சீனாவைஎதிர்கொள்வதில் குவாட் அமைப்பின் திறமை குறித்து மோடியை நம்ப வைப்பதில் வல்லமை பெற்றவர் என்றும்அமெரிக்காவின் அரசியல் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
தற்கொலைக்கு ஒப்பானது
2018 ல் கையெழுத்திடப்பட்ட காம்கசா (COMCASA - Communication, Compatability and Security Agreement) வைப் போன்று பெகா ஒப்பந்தமும் வெறுமனே பொதுவான எதிரியை இணைந்து போராடுவதற்கான திறமையைப் பற்றியது மட்டுமல்ல. ஆனால் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அப்படித்தான் அதனை உருவகப்படுத்துகின்றன. ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே இந்தியாவின் உள்நாட்டு போர்முனை தந்திரங்களை (Sensor to Shooter Networks Working through a Common Centre) அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவருகின்றன.“இந்தியா, அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியுமில்லை. இந்தியா போர்முனையில் நின்றால், அமெரிக்கா இந்தியாவோடு சேர்ந்து இந்தியாவுக்காக போரிடும் என்கிற உத்தரவாதத்தையும் அமெரிக்கா இதுவரை தரவில்லை. அப்படி இருக்கையில், தற்கொலைக்கு ஒப்பான இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மோடி அரசை எது தூண்டியது என தெரியவில்லை” என்கிறார் பிரவீன் ஷானே. (தி வயர், 27.10.2020).
அமெரிக்க தேர்தலுக்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது டிரம்ப் அரசு. அமெரிக்காவோடு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதன் மூலமாக, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது மோடி அரசு. அதுதனக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் கையாள்வதற்கு உதவும் என கணக்குப் போடுகிறது மோடி அரசு. அமெரிக்காவின் கடந்தகால வரலாறு அதன் “நம்பகத் தன்மையை” உணர்த்தும். மேலும், ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை கண்டுள்ள இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவ ரீதியாக நெருக்கமாக காட்டிக் கொள்வதன் மூலம், சீனாவுடன் உள்ள வர்த்தக உறவில் பெரும் பாதிப்பினை சந்திக்க வேண்டி இருக்கும். இன்றுள்ள சூழலில் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. மேலும் அமெரிக்காவுடன் மட்டுமே உறவைப் பேணுவதன் மூலமும், வலுப்படுத்திக் கொள்வதன் மூலமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என நினைப்பது மோடி அரசின் தவறான கணக்காகும்.
“நேட்டோ” கூட்டணி அன்று உலக அளவில் சோவியத் யூனியனைக் குறி வைத்து உருவாக்கப்பட்டது எனில், இன்று குவாட் சீனாவைக் குறி வைக்கிறது. ஆகவே புவி அரசியல் மட்டுமின்றி தத்துவார்த்த நோக்கங்க
ளும் இதற்குள் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் வலையில் வீழ்வது குவாட் - அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுக்கே நல்லதல்ல. உலகின் அமைதி, நலனுக்கும் நல்லதல்ல. இதுவே நேட்டோவின் அனுபவமும் கூட!
===சிவ சுப்ரமணியன்===